தனது மறைவிற்குப் பிறகு, தன் பெயரில் இருக்கும் சொத்துக்கள் அனைத்தும் சிவகாமிக்கும், அவளது வாரிசுகளுக்கும் சேருமாறு எழுதிய உயில் பத்திரத்தின் நகலை தான் சிவகுருவிடம் காட்டினான் மணி. அதைப் படித்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீள முடியாமல், அறையிலிருந்த ஷோபாவில் அமர்ந்திருந்த சிவகுருவின் மனதில் பலவாறான எண்ணங்கள்.
சொத்து முழுவதும் மணியின் பெயருக்கு எழுதி வைத்த அடுத்த நாளில் இருந்து, மணி கல்லூரிக்குச் செல்ல ஆரம்பித்தான்
. மணி கல்லூரிக்குச் செல்லும் கார் ஓட்டுனரில் இருந்து, எலும்பு முறிவுக்கு வைத்தியம் பார்த்த மருத்துவர் முதற்கொண்டு அனைவரையும் தன் கட்டுக்குள் வைத்திருந்தான் சிவகுரு. சிவகுரு இல்லாமல் அவர்களது குழுமத்தை நிர்வகிப்பது கடினம் என்பது சிவகுருவின் பாலம் என்றால், ஒரே பலகீனமாக சிவகுரு கருதுவது சிவகாமிக்கும் தனக்கும் இருந்த உறவு, மணிக்கும் தெரியும் என்பதுதான். அதேபோல், அவர்களுக்குள்ளான உறவு தனக்கு தெரியும் என்பதால், அதை துருப்புச் சீட்டாக உபயோகப்படுத்த மாட்டான் மணி, என்பது சிவகுருவின் கணக்கு. அதே நேரம் தனது குட்டு வெளிப்பட்டு விட்டால், இதுவரைக்கும் வாழ்ந்த வாழ்க்கை, ஒன்றுமில்லை என்று ஆகிப்போகும் என்று உணர்ந்த சிவகுரு, இதுவரைக்கும் எதை வைத்து மணியை பலவீனப்படுத்தி இருந்தானோ, அதே சுபாவின் அன்பை வைத்தே, அவனை மேலும் பலவீனப்படுத்தி, தனக்கு எதிராக எந்த எதிர்வினையையும் ஆற்ற விடாமல் செய்ய முயன்றான்.
அன்னையின் அன்பை, மணியின் மீது ஆயுதமாகப் பயன்படுத்தும் காலம் கடந்து விட்டதை உணரவில்லை சிவகுரு. மணி கண்டிப்பாக, தன்னை அருகில் அனுமதிக்க மாட்டான் என்பது தெரிந்திருந்தாலும், அவன், தன் மனைவி சுமாவை மட்டுமல்லாது, பெரியவர்களையும் அருகே அனுமதிக்க மறுத்தது கொஞ்சம் உறுத்தியது. மணியின் இந்த விலகளை எதிர்பார்க்காத அவனது தாத்தா, கோயம்புத்தூரிலேயே தங்கிவிட முடிவெடுத்தது சிவகுருவை மேலும் நெருக்கடிக்கு உள்ளாக்கியது. தன் மேலான அதிக நம்பிக்கையிலும், மணியை, சிறுவன் தானே என்று எண்ணி உதாசீனமாக எண்ணினாலும், ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை சிவகுரு. மணியின் கவனத்தை டென்னிஸ் மீது திருப்ப, தன்னால் ஆன அனைத்து முயற்சிகளையும் செய்தான், அதிலும் அவனுக்கு தோல்வி தான். மதுவை வைத்து முயற்சி செய்யலாமா என்று கூட ஒரு எண்ணம் வந்தது, ஆனால் அதை அடுத்த நொடியிலேயே நிராகரித்து விட்டான்.
சிவகாமியையோ, அவளின் மகளையோ திரும்பவும் அவர்களது வாழ்விற்குள் இழுத்து, புதிதாக ஏதேனும் சிக்கலை தானே உருவாக்கக் கூடாது என்ற எண்ணம் தான் அதற்குக் காரணம். யாரிடமும் பேசாமல், தான்தோன்றித்தனமாக கல்லூரிக்கு மட்டுமே சென்று வந்து கொண்டிருந்த மணி, அப்படியே இருப்பதுதான் தனக்கு நல்லது என்று நினைத்தான். பிணம் போல் சுற்றிக் கொண்டிருந்தவன், திடீரென்று எப்படி வந்து தனக்கு சவால் விடுவான் என்பதை சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை சிவகுரு. எல்லாம் அவன் நினைத்தது போலவே நடந்து வந்த நிலையில்தான் மணியின் இந்த செயல், சிவகுருவை சற்று அதிர்ச்சி அடையச் செய்தது.
உள்ளுக்குள் தன்னை தைரியப்படுத்திக் கொண்டாலும், ஒரு சின்ன பதட்டம் சிவகுருவுக்கு. எந்தக் காரணத்தைக் கொண்டும் தனக்கும், சிவகாமிக்கும் உள்ள உறவு, தன் மனைவிக்கு தெரிந்துவிடக்கூடாது என்பது மட்டுமே சிவகுருவின் எண்ணமாக இருந்தது. சிவகாமியுடன் இருந்த உறவும் உணர்வுபூர்வமான ஒன்றுதான் என்றாலும், சுமா, அவனது காதல் மனைவி. தன் மனதின் எச்சங்களையும், வக்கிறங்களையும், கொட்டுவதற்கு மட்டுமே சிவகாமியை பயன்படுத்தி வந்தான், சிவகாமியும் அப்படியே, தேவையின், சிவகுருவின் அருகாமையில் கிடைக்கும் பாதுகாப்பின் பொருட்டுதான் அவனை பயன்படுத்தி வந்தாள். அதற்கு அவர்கள் “தங்களால் யாரும் புண்படவில்லை” என்ற சப்பையை கட்டி முட்டுக் கொடுத்து வந்தனர். அதேபோல் சிவகுருவுக்கு மணியை கொல்ல வேண்டும் என்ற எண்ணம், சிவகாமியும் மணியும், தன்னை அசிங்கமாக பேசிவதற்கு முன், இருந்ததில்லை. மணியன் மரணம், தன் மனைவி சுமாவை கடுமையாக பாதிக்கும் என்பதை நன்கு உணர்ந்திருந்த சிவகுரு, அதைப்பற்றி சிந்திருக்கவில்லை. இன்னொரு குழந்தை மட்டும் அவர்களுக்கு பிறந்திருந்தால், மணியின் கதை சிறு வயதிலேயே முடிந்திருக்கலாம். சிவகுருவின் கெட்ட நேரமோ? மணியின் நல்ல நேரமோ? அப்படி எதுவும் நடக்கவில்லை.
மணியை கொல்ல வேண்டும் என்று முடிவு எடுத்ததற்கு முக்கியமான காரணம், இருவருக்குள் இருக்கும்வரை தான் அது ரகசியம், மணிக்கு தெரிந்த தன் கள்ள உறவு எந்த சூழ்நிலையிலும் தன் மனைவிக்கு தெரியக்கூடாது என்பதுதான். என்ன, தன்னை அசிங்கப்படுத்தியதற்காக, சிவகாமிக்கு, மணிக்கும் இருக்கும் தொடர்பை, மதுவுக்கு தெரியப்படுத்தி, அதனால் அவர்கள் இருவரும் படப்போகும் துன்பத்தை ரசித்துவிட்டு, பின் அவர்களை தீர்த்துக்கட்டலாம் என்று திட்டமிட்டு இருந்தான். மதுவே வலிய வந்து தன் பெயரிலான ஷேர்களை விற்க முயன்றதை, சேட்-டீன் மூலமாக வாங்க கிடைத்த வாய்ப்பை, போனஸாகவே கருதினான். அதிர்ஷ்டம் அன்று தோன்றிய நிகழ்வுகள், இன்று தவறவிட்ட தருணங்களாக தோன்றியது. தன் ஈகோவிற்கு முக்கியத்துவம் கொடுக்காமல், காரியத்தை முடிப்பதில் மட்டும் கவனமாக இருந்திருக்க வேண்டுமோ? என்ற கேள்வி எழுந்தது. மீண்டும் தன் வாழ்க்கையை 22, 23 வருடங்கள் பின்னால் சுழன்று அதைப் போல உணர்ந்தான் சிவகுரு.
பெரு மூச்சுவிட்டு, தன் மனதில் எழுந்த எண்ணங்களால் தான் பலவீனப்பட்டு விடக்கூடாது என்று நினைத்துக் கொண்டான். நடப்பது எதுவும் அவன் கட்டுப்பாட்டுக்குள் இல்லாத பொழுது, அனுமானத்தின் பெயரில் புதிதாக எந்த குழப்பத்தையும் ஏற்படுத்த வேண்டாம் என்று எண்ணிக்கொண்டான். மீண்டும் கண்களை மூடி, தன்னை நிதானத்திற்கு கொண்டு வந்தவன், இன்னும் கொஞ்சம் மணி விட்டுப் பிடிக்கலாம் என்று முடிவு செய்தான்.
மணி தூக்கி எறிந்து விட்டு போன அட்டையில் இருந்த வாசகத்தை நினைவு வந்தது அவனது மூளை. உதாசீனச் சிரிப்பை உதிர்த்தான்
Ok, let's Play. முனுமுனுத்தான்.
***************
ஒரு வாரத்திற்கு முன்.
எப்பொழுதும்போல் மாதாந்தர ரிவியூவ் மீட்டிங் நடந்தது. இரண்டு நாட்களுக்கு முன் தான், சோலார் மின் உற்பத்தி தளவாடங்கள் விற்பனைக்கான மிகப்பெரிய ஒப்பந்தம் ஒன்று கையெழுத்து ஆகியிருந்தது. மீட்டிங் முடிந்ததும் அதற்கு உழைத்த அனைவருக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
"எல்லாம், தம்பி கொடுத்த ஐடியாவால்தான்" மணியின் தாத்தா, அவனை உற்சாகமூட்டும் முயற்சியில், அனைவருக்கும் முன்பு தெரிவித்தார். மொத்த கூட்டம் கைதட்டியது, அதை கொஞ்சமும் ரசிக்கவில்லை சிவகுரு, காது கொடுத்தே கேட்கவில்லை மணி.
**************
"தப்பான நம்பிக்கை கொடுக்காதீங்க மாமா!! அதவிடவும் மத்தவங்களா டிஸ்கிரடிட் பண்ணாதீங்க!!" மூவரும் மட்டும் தனியாக இருக்கும் சந்தர்ப்பம் வாய்ந்ததும், பொறுக்க மாட்டாமல் சிவகுரு
"புரியல சிவா!!" சிவகுரு எதைப் பற்றி பேசுகிறான் என்பது பபுரிந்தும், புரியாதது போல கேட்டார், மணியின் தாத்தா.
"இந்த காண்ட்ராக்ட் கிடைக்கிறதுக்குப் பின்னால் பத்து வருஷம் உழைப்பு இருக்கு, அதுக்கான மொத்த கிரடிட்டும் எப்படி இவனுக்கு போகும்?" அருகில் இருந்த மணியை பார்த்து சிவகுரு.
"நாம புதுசா 3 யூனிட் ஆரம்பிக்காமல் இருந்தா, இந்த காண்ட்ராக்ட் கிடைச்சீருக்குமா?" மாமனாரின் கேள்வியிலேயே, தான் பேசியிருக்க கூடாது என்பதை உணர்ந்த சிவகுரு
"கிடைத்திருக்காது!!" சிவகுருவின் குரல் தாழ்ந்தது, மணியின் செவிகள் முதல் முறையாக அந்த உரையாடலை உள்வாங்கிக் கொண்டது.
"சப்ளை கேப்பாசிட்டி இல்லணு ரிஜக்ட் ஆகியிருக்கும், தம்பி மட்டும் ஒரு வருஷத்துக்கு முன்னால பேசி என்னை கன்வின்ஸ் பண்ணலன்னா, கண்டிப்பா, அந்த விரிவாக்கத்துக்கு நான் ஒத்துக்கிட்டிருக்க மாட்டேன். இப்பவும் சொல்றேன், அந்த காண்ட்ராக்ட் கிடைக்கிறது மணி தான் காரணம்" சொல்லி முடித்த விதத்திலேயே இதற்குமேல் இதை பற்றி பேச விரும்பவில்லை என்பதையும் சேர்த்தே சிவகுருவுக்கு உணர்த்தினார், மணியின் தாத்தா.
மணிக்கு, தான் பதற்றத்தில் இருந்த போதெல்லாம், எதிராளி அடித்த பந்தின் "டொக்" சத்தம், எப்படி அவனை உசுப்பேற்றி விடுமோ, அப்படி உசுப்பேற்றி விட்டு இருந்தது, சுருங்கிப்போன சிவகுருவின் முகம். அன்று, இரவு அறையில் நிலைகொள்ளாமல் நடந்து கொண்டிருந்தான். காற்றுப்புகாத அறையில் அடைப்பட்டு கிடந்தவனுக்கு, அந்த அறையின் சுவர்கள் எல்லாம் காற்றில் கரைந்து போனால் எப்படி இருக்குமோ, அப்படி ஒரு மனநிலையில் இருந்தான். கொஞ்சம் தெளிவடைந்து இருந்தான் அவன். எங்கு அடித்தால் சிவகுருவுக்கு வலிக்கும் என்பது, கொஞ்சம் புரிந்தது போல் இருந்தது அவனுக்கு. கண்ணாடியின் முன் அமர்ந்து, அதில் தெரிந்த பார்வையில் தன்னைத் தொலைத்தான்.
மீண்டும் மதுவுடன் அவன் காதலித்து கசிந்துருக்கிய நாட்கள் நினைவுக்கு வந்தது. வாழ்க்கையை அவள்தான் என்று, யாரை நினைத்திருந்தானோ, அவள், இனி அவன் வாழ்க்கையில் இல்லை, அவளுக்குத் தான் தகுதியானவனும் இல்லை என்பது அவனுக்கு தெளிவாக புரிந்தது. அந்தத் தெளிவுதான், அந்த வலிக்கு காரணமானவனை அழித்தே தீருவது என்று அவனை உறுதி கொள்ளச் செய்தது, தான் செய்த தவறுகள் புரிந்தது. முதன்முதன்முதலாக மது, முடியாது என்று சொன்ன பொழுதே, நேராக தாத்தாவிடம் சென்றிருக்க வேண்டும். அதுதான் தான் ஆடி இருக்கவேண்டிய ஆட்டம். தன்னுடைய ஆட்டம் என்று நினைத்து, சிவகுரு-சிவகாமியின் ஆட்டத்தில் ஆடியதுதான், தான் செய்த தவறு என்பது உறைத்தது. அதில் தான் இழைத்த தவறால், பண்ணக்கூடாத பாவங்களை எல்லாம் பண்ணி, இன்று விமோசனத்துக்கு வழியில்லாத இல்லாத, இழிநிலை தனக்கு.
எப்படி மதுவின் மீதான வெறுப்பில், அவளின் கவனத்தை ஈர்ப்பதரக்காக, முதன்முதலாக தொழில் விஷயங்களில் ஈடுபாடு காட்டினானோ, அதேபோல் ஒரு ஆர்வ மிகுதியில், தன்பக்கம் தன் சகமாணவர்களின் கவனத்தைத் ஈர்க்கத்தான், முதன்முதலாக டென்னிஸ் கோர்டுக்குள் நுழைந்தான். டென்னிஸ் அவனுக்கு கைகூடியது போல், தொழிலும் கைகூடும் என்று நம்பினான். அப்படியே கைகூடாவிட்டாலும், இந்தமுறை தன்னால் யாருக்கும், எந்த இழப்பும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தான்.
வலி ஒருவனை ஆக்கவும் செய்யும் அழிக்கவும் செய்யும். அவனுக்கு வாழ்க்கையில் ஏற்பட்ட வலியை வைராக்கியமாக பற்றிக்கொண்டான்.
ஒருவனுக்கு சாவதை காட்டிலும் அதிக வலி கொடுப்பது, இதுதான் தன் வாழ்க்கை என்று அவன் நம்புவதை அழிப்பதுதான் என்பதை அவன் வாழ்க்கையே அவனுக்கு கற்றுக் கொடுத்திருந்தது. தன் அப்பாவுக்கு, அவர் மனைவியோ அல்லது சிவகாமியோ வாழ்க்கை இல்லை. ஃப்யூச்சர் குரூப்ஸின் இயக்குனர், என்பதும், சமுதாயத்தில் அதுதரும் மதிப்பும், அதிகாரமும், மரியாதையுமே அவரது வாழ்க்கை என்பது அவர் சொத்தை எழுதிக் கொடுத்த, போதும், கிரெடிட் மொத்தமும் அவனுக்கு கொடுக்கப்பட்டபோதும் சுருங்கிப்போன சிவகுருவின் அவனுக்கு புரியவைத்தது. ஃப்யூச்சர் குரூப்ஸின் இயக்குனர் என்ற நிலையில் இருந்து, அவரை இறக்கி, அவருக்கு இருக்கும் அடையாளத்தை இல்லாமல் செய்வதுதான், அவருக்கு மரணத்தைக் காட்டிலும் அதிக வலி கொடுக்கும், அதைத்தான் தான் கொடுக்க வேண்டும் என்று உறுதி பூண்டான்.
**************
கல்லூரிப் படிப்பை ஒப்புக்கு முடித்தவன், படிக்கும்போதே படிப்பை காட்டிலும் தொழில்தான் கவனம் அதிக கவனம் செலுத்தினான். அதிலும், அவனது அப்பாவுக்கு மிகவும் பிடித்த சோலார் பிரிவின் மீது தனி கவனம் செலுத்தினான். படிப்பு முடிந்த ஆறு மாதத்திலேயே தங்கள் கம்பெனிகளின் தினசரி நடவடிக்கையில், இவனது தலையீடு அதிகமாக, சிவகுருவிடம் இருந்து வந்த எதிர்ப்பை, தாத்தாவை வைத்து சமாளித்தான். நெருங்கும் முயன்ற தாயையும் தள்ளியே வைத்திருந்தான்.
தேடித்தேடி படித்தான் இரவு பகல் பாராமல் உழைத்தான். கிடைக்கும் அத்தனை சந்தர்ப்பங்களிலும் அவனது தந்தையின் முக்குடை தான், அவனது தந்தையால் மூக்கடைப்பும் பட்டான். ஆரம்பத்தில் அதிக மூக்குடைபட்டாலும் போகப்போக தொழிலில் தெளிவுபெற இவன் அவனது தந்தையின் கிடைக்கும் எண்ணிக்கைகள் அதிகமாயின. சமுதாயத்தில் அவர் அடைந்திருக்கும் நிலையில் இருந்த அவரை அப்புறப்படுத்துவது ஒன்றையே வாழ்க்கையின் குறிக்கோளாக கொண்டு செயல்பட்டவன், அதை செயல்படுத்தவும் ஆரம்பித்தான். முடிந்த அளவு, தனக்கும், தன் அப்பாவுக்கும் நடக்கும் சம்பாஷனைகளின் போது, அருகில் தாத்தா இல்லாமல் செய்வதில்லை அவன்.
**************
மொத்த குடும்பமும் இரவு உணவு அருந்திக் கொண்டே இருக்க, ஆரம்பித்தான் மணி.
"நாமே, ஏன் ஒரு லைஃப்ஸ்டைல் ஸ்டோர் தொடங்கக் கூடாது? “ ஆர்வகோளாரில் மணி.
"நாம எதுக்கு சிலர வியாபாரம் எதுக்கு தொடங்கணும்?” சலிப்பாக சிவகுரு.
"டெக்ஸ்டைல் இண்டஸ்ட்ரி வைச்சிருக்கோம், கார்மெண்ட்ஸ் வைச்சிருக்கோம், நாமேலே அத ரீடைலும் பண்ணினனா லாபத்தை அதிகப்படுத்தலாம்!!” விடாமுயற்சி மணி.
"நம்மாளளோட கஸ்டமர்ஸ்க்கு, நாமே காம்படீஷன் ஆனா, உள்ள பிஸினசும் போயிடும். இந்த மாதிர் கொஞ்சம் கூட லாஜீக்கே இல்லாத ஐடியாவா எடுத்துக்கிட்டு வந்து என்னோட டைம வேஸ்ட் பண்ணாத!!” மூக்குடைத்த சிவகுரு, மணியை, ஏளனமாக பார்க்க, சிவகுருவின் சூடான வார்த்தைகளை தாங்கள் அங்கீகரிக்க வில்லை என்பது போல் சிவகுருவை பார்க்க, சுதாரித்த சிவகுரு.
"கஸ்டமர்ஸ்க்கு, நாமே காம்படீஷன்னா இருக்குறது கூட ஓகே, மேனேஜ் பன்னிக்கலாம், நம்ம டெக்ஸ்டைல் பிசினஸ் இன்னும் வருஷாவருஷம், குறைஞ்சது 6 டூ 8 பர்சண்ட் வளர்ந்துகிட்ட தான் இருக்கு. எப்பவுமே ஒரு வளர தொழில் கையில் இருக்கும் போது, அதில் உச்சம் தொடுகிற வரைக்கும், நம்ம கவனமெல்லாம் அதுல தான் இருக்கணும். இதுதான் அடிப்படை!!” வேறு வழி இல்லாமல் நெருக்கடியால், தானே மணிக்கு பிஸினஸ் நுணுக்கங்களை கற்றுக்கொண்டுக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்படுவான்.
***************
"நாம ஏன் மின்சாரத் தயாரிப்பில் ஈடுபட கூடாது?” ஆர்வகோளாரில் மணி.
“..........................” சலிப்புற்ற சிவகுரு.
"சோலார் பவர் உற்பத்தி பண்றதுக்கு தேவையான மொத்த பார்ட்ஸ்சும் நாமதான் தயாரிக்கிறோம், ஏன் மின்சாரமும் நாம்மலே உற்பத்தி செய்யக் கூடாது? விடாமுயற்சி மணி.
"இன்னும் நம்ம சோலார் பிசினஸில், லாபம் சம்பாதிக்க ஆரம்பிக்கல, அதுவுமில்லாம புதுசா தொழில் தொடங்க கேபிட்டல் எங்க இருக்கு? முதலீடு எங்கிருந்து வரும்?” மூக்குடைத்த சிவகுரு. தன் மாமனாரின் பார்வையை, பார்த்து மீண்டும் சலிப்புற்று
“மாமா, ஸ்பூன் பீட் பண்ண முடியாது. ஆபீஸ்ல இருக்கும் போது, I am his M. D, அவ்வளவுதான்!!” என்று இப்பொழுதெல்லாம் கொஞ்சம் சூடாக ஆரம்பித்தான்.
****************
இப்படி தன் தந்தையின் கைகளால் மூக்குடைபட்ட போதெல்லாம், கூடுதல் உத்வேகத்துடன் உழைக்க ஆரம்பித்தான் மணி. யாரிடமும் முன் அனுமதி கேட்க தேவையில்லை என்ற ஒரே காரணத்திற்காக தனியாக ஒரு பெரும் தொகையை பெற்றுக்கொண்டு, முதலீடுகள் செய்வதற்கு என்றே, தனியாக பியூச்சர் ஹோல்டிங் என்று ஒரு கம்பெனி ஆரம்பித்தான். சிவகுருவை வெறுப்பேற்ற வேண்டும் என்று, அவன் செய்த இந்தச் செயல் உங்களுக்கு மேலும் பலம் சேர்த்தது. பணமுதலை ஒண்ணும் உள்ள இறங்கிருக்கு என்று பிஸினஸ் வட்டத்தில் தகவல் பரவ, முதலீடுகளை எதிர்பார்த்து, பல விதமான தொழில் புரிபவர்கள் வருவார்கள், இவனை தேடி வருவார்கள். அப்படி வருபவர்களின் தொழில் அறிவை, மொத்தமாக உள்வாங்கிக் கொண்டு, தன்னைத் தானே மேம்படுத்தி கொண்டான். இவன் செய்த பல முதலீடுகள் சொதப்பி இருந்தாலும், சில முதலீடுகளில் நம்பிக்கை தந்தது. அது கொடுத்த தெம்பில், தன் ஆட்டத்தின் அடுத்த கட்ட நகர்வை முன்னெடுத்தான்.
************
சிவகுரு அலுவலகத்தில் நுழைந்ததில் இருந்து, எதிர்ப்பட்ட அனைவரும் அவனுக்கு வாழ்த்துச் சொன்னார்கள், சிலர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார். முதலில் குழம்பினாலும், சமாளித்துக்கொண்டு அனைவரது வாழ்த்துக்களையும், சிரித்த முகத்தோடு பெற்றுக்கொண்ட சிவகுருவின் மனதோ பதட்டம் அடைந்தது. கடந்த ஒன்றரை வருடங்களாகவே, இதே போன்ற ஒரு பதட்டம் எப்பொழுதும், சிவகுருவின் அடிமனதில் இருந்து கொண்டேதான் இருந்தது. தன்னை மீறி எதேனும் நடந்துவிடுமோ என்ற எண்ணம் கொடுக்கும் பதட்டம். ஏனோ, இன்று அந்தப் பதட்டம் சற்று அளவுக்கு அதிகமாய் இருந்தது.
அறைக்குச் செல்ல திரும்பும்பொழுது தான்
"சார், சேர்மன் சார், உங்கள, அவர் ரூமுக்கு வரச்சொன்னார்!!" இடைமறித்த சிவகுருவின் செக்ராடரி சங்கரபாணி.
குழப்பத்துடன் தனது மாமனாரின் அலுவலக அறையை நோக்கி நடந்தான். அறையின் வெளியே இருந்த பெயர்ப்பலகையை கண்டவனுக்கு அதிர்ச்சி. தனது மாமனார் பெயர் இருந்தா இடத்தில் தனது பெயர். குழுமத்தின், தலைமை பொறுப்பை ஏற்கவேண்டும் என்பது தனது நீண்ட நாள் கனவாக இருந்தாலும், தன் மாமானாரின் மேல் உள்ள அபிப்ராயத்தால் அவராகவே கொடுக்கட்டும் என்று அவருக்கு எந்தவித நெருக்கடியும் கொடுக்கவில்லை. இன்று தன் கனவுகளில் ஒன்று மெய்யாக, முழு மனதுடன், மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை, சிவகுருவால். தனக்கு சாதகமாக இப்பொழுதுவரை எல்லாம் நடந்து கொண்டிருந்தாலும், அது தன் கட்டுப்பாட்டில் இல்லாமல் நடப்பது வாடிக்கையாக இருந்தது சிவகுருவுக்கு. பெயர்பலகையைப் பார்த்தவாறு நின்றிருந்த சிவகுருவின் கவனத்தை, கைதட்டல் ஒலி தொலைத்தது.
முகம் கொள்ளா சிரிப்புடன், சிவகுருவை நோக்கி வந்தார் மணியின் தாத்தா.
"வாழ்த்துக்கள், சிவா. இன்னையோட நான் ரிட்டையர்ட் ஆகலாம்னு முடிவு பண்ணிட்டேன்" என்றவர், சிவகுருவின் தோள்களில் கைபோட்டு, சேர்மன் அறைக்குள், அழைத்துச் சென்றார். பின்னாலேயே, இருக்கிறதா? இல்லையா? என்று தெரியாத ஒரு சிரிப்பை முதன்முதலாக சூடிக்கொண்டு, அவர்களை தொடர்ந்தான் மணி.
**************
"இப்ப எதுக்கு மாமா இது, இன்னும் இறங்கி பார்க்க வேண்டிய வேல அதிகமா இருக்கு!! சோலார் பிசினஸ், இந்த குவாட்டர்ல பிரேக் ஈவன் ஆகிடும்!! அதுக்கு அப்புறம் உங்ககிட்ட, நானே, இதப்பத்தி பேசணும்னு தான் நினச்சுருந்தேன்" அரைமணி நேரம் கழித்து, தனக்கு கிடைத்த அதிர்ச்சியில் இருந்து மீண்ட சிவகுரு, சிரித்தார் பெரியவர்.
"அதனால தான் இன்னைக்கு, நல்ல வேளை, உங்களுக்கு வயசு ஆயிடுச்சுனு நீயா வந்து சொல்றதுக்குள்ள, நானே இடத்தை காலி பண்ணினது நல்லது, இல்லையா? " மீண்டும் சிரித்தார்.
"என்ன மாமா இது?" கொஞ்சம் பதட்டம் அடைந்த சிவகுரு.
"சும்மா பா!! பிசினஸ்ல எல்லா முடிவையும் சரியான டைம்ல எடுத்துக்கணும்!! இதுதான் கரெக்ட் ஆனா டைம்னு எனக்கு தோனிச்சு!! உன் அளவுக்கு இல்லாவிட்டாலும், நானும் ஒரு நல்ல பிசினஸ் மேன்தான்னு நம்புறேன்!!" தன் மருமகனை, தங்களது குழுமத்தின் தலைமை பொறுப்பில் அமர்த்திவிட்ட பெருமிதம், அவர் முகத்தில் தெரிந்தது. அவர் முகத்தில் தெரிந்த உண்மை, சிவகுருவை கொஞ்சம் தைரியம் படுத்தியது.
****************
ஒரு மணி நேரம் கழித்து, தனது இருக்கையிலிருந்து எழுந்து, மணியன் அலுவலக அறையை நோக்கி நடந்த கொண்டிருந்த சிவகுருவின் மனதில் "நேரடியா உனக்கு என்ன தான் வேணும்னு கேட்டு விடலாம்" என்ற ஆவேசம். உள்ளே நுழைந்த சிவகுருவை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தது போல், நின்றுகொண்டிருந்தான் மணி.
"Congratulations chairman sir!!" கண்ணடித்த மணி, தன் பாக்கெட்டில் இருந்து, ஒரு சிவப்பு அட்டையை எடுத்து டேபிள் போட்டுவிட்டு, அந்த அறையில் இருந்த வாஷ்ரூம்க்குள் நுழைந்து, கதவை அறைந்து சாத்தினான்.
தன்னியல்பில், அந்த அட்டையை எடுத்து வாசித்த சிவகுருவின் உதடுகள் முணுமுணுத்தது.
Checkmate!!
"எத்தனையோ பேர், பெரிய தொழில் முதலைனு சொல்லிக்கிட்டு திருஞ்சவன எல்லாம், ஒரு சின்ன இடைவெளி கிடச்சா போதும், அவன் எவ்வளவு பெரிய கொம்பனா இருந்தாலும் அசாலட்ட அடிச்சு சாச்சிருவேன், ஆனா இந்தப் பொடியன்....!! சின்னயப் பையன், இரண்டு வருஷத்துக்கு முன்னால அகோவுண்டஸ் பேலன்ஸ் ஷீட் எடுத்துக்கொடுத்துப் பார்க்க சொன்ன, திருதிருனு முழிச்சிருப்பான்!!. ஆனா இன்னைக்கு இவ்வளவு பெரிய தொழில் சாம்ராஜ்ஜியத்தை கட்டியெழுப்பிய, எனக்கே சவால்விடுறான்!!. ஒருவேளை நான் அவன தப்பா எடைபோட்டுடேனோ? எங்க தப்புவிட்டோம்? ” என்று மூளையை கசக்கியவனுக்கு பெரிதாக ஒன்றும் விளங்கவில்லை.
“இப்போவும் ஒண்ணும் கேட்டுப்போகவில்லை. அவன், என்னை தொழில் முறையில் ஜெயிக்கணும்னு மட்டும்தான் நினைசிக்கிருக்கான். சிவகாமிக்கும் எனக்கும் உள்ள தொடர்பை அவன் சொல்லணும்னு நினைச்சிருந்தால், எப்போவோ சொல்லிருக்கலாம். எனக்கு, எப்படி என்னோட பெயரை காப்பாற்றிக் கொள்ளுனும்னு கட்டாயம் இருக்கோ, அதே மாதிரி அவனுக்கும், அவன் பேரை காப்பாற்றனும்னு கட்டாயம் இருக்கு. அதனால் அதைப்பற்றி கவலைப்பட தேவையில்லை. இருக்கும், கண்டிப்பா சின்னதா ஒரு கேப் இருக்கும், அத மட்டும் கண்டு பிடிச்சிட்டா போதும், மொத்தமா இவனை அடிச்சு சாச்சிறலாம். பதட்டப் படாத, எதுவுமே உன் கைய விட்டுப் போகல!!. என்று தனக்கு தானே தெம்பு சொல்லிக்கொண்ட சிவகுரு, தன் கனவு மெய்ப்பட்டதை, சேர்மேன் இருக்கையில் அமர்ந்தததை எண்ணி, அதை ரசிக்கலானான்.
**************
அன்று மாலையே சிவகுருவின் நிம்மதி தொலைந்தது. ஃப்யூச்சர் குரூப்ஸின் சேர்மன் ஆக்கப்பட்டதன் பொருட்டு, அதற்கான பத்திரிக்கை அறிவிப்பின் கடிதத்தோடு, மணியை எம்டியாக அறிவிக்கும் கடிதமும் சேர்ந்தே வந்திருந்தது சிவகுருக்கு. சிவகுருவை சேர்மன் ஆகும், அறிவிப்பில், ஏற்கனவே தனது மாமனார் கையெழுத்திட்டு இருக்க, மணியை M.Dயாக அறிவிக்கும் அறிவிப்பின் கீழ், சிவகுருவின் பெயர் பொறிக்கப்பட்டு, கையெழுத்துக்காக காத்திருந்தது. அவன் அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே, உள்ளே நுழைந்தனர் இருவரும்
.
Checkmate.
இப்பொழுது புரிந்தது சிவகுருவுக்கு. மணியை M.Dயாக அறிவிக்கும் அறிவிப்பில் கையெழுத்திடுவதைத் தவிர, தனக்கு வேறு வழி இல்லை என்பதை உணர்ந்த சிவகுரு, அதில் கையெழுத்துவிட்டு நிமிர்ந்து தன் மாமனாரை பார்த்து புன்னகைத்தான்.
ஒன்றும் கைவிட்டுப் போகவில்லை. எல்லாம் beginners luck. என்ன மணிக்கு அந்த கால அளவு கொஞ்சம் அதிகமாக இருக்கிறது. ஒரு சின்ன இடைவெளி கிடைத்தால், மொத்தமாக எல்லாத்தையும் தன் கட்டுக்குள் கொண்டுவந்து விடலாம். அந்தச் சின்ன இடைவெளிக்கு காத்திருக்கும் வரை தன்னை பலவீனமாக்கி கொள்ளக் கூடாது முடிவு செய்த சிவகுரு, அடுத்த வாரமே பெரிய அளவில் ஒரு பார்ட்டி ஏற்பாடு செய்தான். குடும்பத்தினரும், தொழில் வட்டத்தில் முக்கியமானவர்களையும், தங்கள் நிறுவனத்தில் வேலை பார்க்கும் முக்கிய புள்ளிகளையும் அந்த விருந்துக்கு அழைத்து, மணியை "ஆகா, ஓகோ" என்று புகழ்ந்து தள்ளினார். சிவகுரு.
சேர்மன் ஆனதற்காக கொடுக்கப்படும் பார்டி என்று நினைத்து வந்தவர்களுக்கு, அப்படி அல்ல, இது மணியின் வெற்றியை கொண்டாடும் விருந்து என்ற பிம்பத்தை எளிதாக கட்டியமைத்தார். சிவகுருவின் குடும்பத்துப் பெரியவர்கள் பூரித்துப் போனார்கள். விருந்தில் கலந்துகொண்ட பெரும்புள்ளிகளோ, "புலிக்குப் பிறந்தது பூனையாகுமா " என்று சிவகுருவை வாயாரப் புகழ்ந்தார்கள். சிவகுருவின் மனைவி சுமாவோ, ஒருபடி மேலே சென்று, அறைக்கு வந்ததும் கணவனை ஆரத்தழுவிக் கொண்டாள். கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களுக்கு பிறகு, ஆத்தமார்த்தமான அணைப்பு. ஆரத்தழுவிக் கொண்டுவளின் காதுகளில், கிசுகிசுத்து, அவளை சிலிர்க்கச் செய்து தானும் சிலிர்த்துக் கொண்டான் சிவகுரு. நிம்மதியாக தன்னைக் காட்டிக்கொண்டு படுத்திருக்கும், தன் மனைவியை, அணைத்துக் கொண்டு, அவனும் உறங்கிப் போனான். மொத்த குடும்பமும் மகிழ்ச்சியில் இருக்க, மணி எப்பொழுதும் போல் உணர்வற்று இருந்தான். அன்று இரவு அந்த வீட்டில், அனைவரும் நிம்மதியாக உறங்க, மணி மட்டும் விழித்திருந்தான், எப்பொழுதும் போல, ஆனால் குழப்பத்துடன்.
*************
இரண்டு மாதம் கழித்து,
“மாமா!! நம்ம கம்பெனிகளை BSEல(Bombay Stock Exchange) லிஸ்ட் பண்ணலாம்னு ஒரு ஐடியா, நீங்க என்ன சொல்றீங்க?” தான் தேடியலைந்த ,அந்த சின்ன இடைவெளியை ஒருவழியாக கண்டுபிடித்துவிட்டான் சிவகுரு.
"இதத்தான், தம்பி கொஞ்ச நாளைக்கு முன்னால சொன்னப்ப, வேண்டாம்னு சொன்ன, ஞாபகம் இருக்கா சிவா? அதுவும் இல்லாம ஸ்டாக் எக்ஸ்சேஞ்சில் கம்பெனிகளை லிஸ்ட் பண்ணினா, போர்ட் மெம்பர்ஸ் போடணும், அதிலும் நம்ம நிர்வாகத்துக்கு சம்பந்தம் இல்லாத இன்டிபெண்டன்ட் மெம்பர்ஸ் இருக்கணும்!!"
மணி மின்சாரத் தயாரிப்பில் ஈடுபடலாம் என்று சொன்னபோது, முதலீடு எங்கிருந்து வரும்? என்று சிவகுரு கேட்க, நான்கைந்து நாட்களுக்கு பின், இதை யோசனையை மணி தெரிவித்திருந்தான். ஸ்டாக் எக்ஸ்சேஞ்சில் கம்பெனிகளை லிஸ்ட் செய்தால், நிர்வாகத்தின் முழு கட்டுப்பாடும் தங்களிடம் இருக்காது என்ற காரணத்தைச் சொல்லி நிராகரித்த சிவகுரு, அதை யோசனையோடு இன்று வர, அதே கேள்வி கேட்டார் மணியின் தாத்தா.
"தம்பி சொன்னதுதான் கரெக்ட்டு!!. நிர்வாகக் கட்டுப்பாடு நம்மகிட்ட இருக்கணும்னு நினைச்சே, நாம்மல நாம்லே, அண்டர் வேல்யூ பண்ணிக்கிறோம் தோணுச்சு!! நாம அடுத்த கட்டத்திற்கு போகணும்னா, இது தான் ஒரே வழினு எனக்குத் தோணுது!! நம்முடைய எல்லா பிஸினஸும் இப்போ பிராஃபிட்ல தான் இருக்கு!! சோலார் இண்டஸ்ட்ரீஸ் கூட இந்த குவாட்டர்ல பிரேக்-ஈவென் ஆக்கிடுச்சு!! இதுதான் சரியான டைம்னு தோணுது!! இப்ப மட்டும் நம்ம லிஸ்ட் பண்ணினா, காஷ் ஃப்லோ இருக்கும்!! அதை யூஸ் பண்ணி, தம்பி சொன்ன மாதிரி மின்சார தயாரிப்புல இறங்கலாம்!!” மணியை வைத்தே தன் காய்களை சரியாக நகர்த்தினான் சிவகுரு.
"ஐடியா நல்லாத்தான் இருக்கு, ஆனா......” பெரியவர் தயங்கினார்.
"நாம ரெண்டு பேருமே பழைய காலத்து ஆளுங்க மாமா!! தம்பி, இந்த ஜெனரேஷன்!! அவனுக்கு கரெக்டா தெரிஞ்சிருக்கு!!” தன் மாமனாரின் தயக்கத்தை கண்டவுடன் அதற்கான மொத்த கிரெடிட்-டையும் மணியின் பக்க சாய்த்து, அவரை தன் பக்கம் சாய்த்தான் சிவகுரு.
தன் மொத்த திட்டத்தையும் பெரியவரிடம் பகிர்ந்தது, அவரது கேள்விகளுக்கெல்லாம் பதில் அளித்து, திட்டத்திற்கு சம்மதம் வாங்கிவிட்டே அனைவருக்கும் தெரிவித்தான்.
**************
இரண்டு மாதம் கழித்து ஒருநாள் மாலை,
பங்குசந்தையில் அங்கமாகும் முன், குலதெய்வம் கோயிலுக்கும், மணியின் பெரியப்பாவின் சம்பாதிக்கும், மொத்த குடும்பம் வணங்கச்சென்றது. காலையில் குலதெய்வம் கோயிலுக்கு சென்றவர்கள், மாலையில் மணியின் பெரியப்பாவின் சமாதிக்கும் சென்று கும்பிட்டார்கள். அனைவரும் கிளம்பும் நேரத்தில், தான் கொஞ்ச நேரம் தனியாக தன் பெரியப்பாவின் சமாதியில் இருந்துவிட்டு வருவதாக சொன்னான் மணி. மறுத்துப் பேச வலியில்லாமல் அனைவரையும் சமாளித்து அனுப்பினான். ஏனோ அவனுக்கு, அங்கு, தனியாக இருக்க வேண்டும் என்று தோன்றியது.
உன் பெரியப்பாவின் சமாதியை வெறித்துக் கொண்டிருந்தான்.
சிவகுரு என்ற தனிப்பட்ட மனிதனின் மேல் எந்த மரியாதையும் இல்லாவிட்டாலும், கடந்த ஒன்றரை வருடங்களில், தங்கள் குழுமத்தின் M.D சிவகுருவின் மிகப்பெரிய பிரம்மிப்பு உண்டாகியிருந்தது மணிக்கு. குழப்பமில்லாத, மிகவும் சீரான, Well-oiled machine போல தங்களது குழுமத்தின் நிர்வாக கட்டமைப்பைப் பார்த்து வந்த பிரமிப்பு அது. அவர்கள் குழுமத்தில் பெரும்பாலான அதிகாரங்கள் M.Dயின் வசமே இருந்தது. சிவகுருவின் பெரும் பலமே இதுதான், சிவகுருவின் அந்த பலத்தை எடுத்துக்கொள்ள முடிவு செய்தான் மணி. சீராக நடந்து கொண்டிருக்கும் தொழில்களில், தனது உழைப்பு பெரிதாக தேவைப்படாது என்பது புரிந்தது மணிக்கு. பெருங் கவனம் தேவைப்படும் ஒரே தொழில் சோலார் industries மட்டும்தான். அதைப் பற்றிய புரிதல் அவனுக்கு கொஞ்சம் அதிகமாகவே இருந்தது ஒரு காரணம் என்றால், அதை நிர்வகிப்பது மீர் அலி என்பது மற்றொரு நம்பிக்கை. அந்த நம்பிக்கையில்தான் அடுத்தகட்ட நகர்வாக, M.D ஆவது என்று முடிவு செய்து வேலைகளில் இறங்கி அதை செய்து முடித்திருந்தான்.
பங்குசந்தையில் அங்கமாகும் முன் கம்பெனிகள் நிர்வாகத்தை ஒழுங்குபடுத்துவது என்ற பெயரில் மொத்தத்தையும் மாற்றி அமைக்க ஆரம்பித்த சிவகுரு. அடுத்த இரண்டு மாதங்களிலேயே மூன்று பிரிவுகளாக கம்பெனி பிரிக்கப்பட்டது. இண்டஸ்ட்ரீஸ், கன்ஸ்டிரக்ஷன், ஹோல்டிங்ஸ். மிகவும் சிறிய நிறுவனங்கள் விற்கப்பட்டன. அப்படி செய்யப்பட்ட மாற்றங்களின் அங்கமாக, நிர்வாகத்தில் M. Dயின் அதிகாரங்களை குறைத்த சிவகுரு, அதை சரிக்கட்டும் விதமாக மணியை, தன் மாமனார், மனைவியை, தன்னோடு சேர்த்து, போர்ட் மெமபர்களில் ஒருவனாக ஆக்கினான்.
இந்த முறை கொஞ்சம் பெரிதாகவே எதிர்வினையை எதிர்நோக்கி இருந்தான். ஆனால் தான் நினைத்ததற்கு மாறாக, சிவகுருவோ கொண்டாட்டத்தில் இருக்க, முதல் முறையாக சற்று குழம்பினான். உணர்வற்று இருந்தாலும், உள்ளம் பரபரப்பாய் இருந்தது. எல்லாம் சரியாக திட்டமிட்டுதான் செய்தான். மணி தான் எதிர்பார்த்த வினை வராமல் போக கொஞ்சம் பதட்டப்பட்டான். அதை சரியாக பயன் படுத்துக்கொண்டார் சிவகுரு.
"இன்னும் கொஞ்ச நாள் போகட்டும், எனக்கு இருபத்தி மூணு வயசு கூட ஆகல!! நான் கொஞ்சம் தெளிவாகிக்கிறேன்" என்று கேட்ட மணியை
"உங்கப்பாவும், நானும், இதே வயசுல தான் தொழில் பண்ண ஆரம்பிச்சோம். நீ எங்கள விட திறமைசாலி, அதுல எனக்கு எந்த சந்தேகமும் இல்லை!! இந்த ரெண்டு வருஷத்திலேயே உன்ன நீ நிரூபிச்சுட்ட!! எப்படிப் பார்த்தாலும் நம்ம கம்பெனியோட எதிர்காலம் நீ தான்!! இப்போதான் நீ தன்னிச்சையாக செயல்படணும்!! தள்ளி நின்னாலும் உனக்கு ஒரு வழிகாட்ட, நான் இருக்கேன்!! மேஜர் ஸ்டேக் ஹோல்டர் நம்ம தான், 20% லிஸ்ட் பண்றதால தொழிலை இன்னும் விருத்தி செய்யலாம்!! நீ சொன்னதுதான், இந்த வயசுலேயே போர்ட் மெம்பரானு திகைக்க கூடாது!! நீ என் பேரன் டா ராஜா!!" என்று மணியின் தாத்தாவைக் கொண்டே அவனின் வாயை அடைத்தான், சிவகுரு.
தயாரிப்பு துறையில் இருந்த அத்தனை கம்பெனிகளையும் ஃப்யூச்சர் இண்டஸ்ட்ரீஸ் என்ற ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து, அந்த நிறுவனத்தை லிஸ்டட் கம்பனியாக மாற்றுவது என்று முடிவு செய்யப்பட்டது. முதலில் வெறும் 20 சதவிகிதத்தை மட்டுமே ஸ்டாக் எக்ஸ்சேஞ்சில் கொடுப்பது என்று திட்டமிட்டிருந்தான்.
மொத்தமாக அடித்து வீழ்த்தி அசிங்கப்படுத்துவதைக் காட்டிலும், எப்படி மொத்த குடும்பத்தையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்து, தன்னை தனி மரமாகவே ஆட்டி வைத்தாரோ, அதையே அவருக்கு தானும் செய்ய வேண்டும் என்று நினைத்து, கிட்டத்தட்ட அதை அடைந்தும்விட்டான் மணி, அவன் செய்து முடிக்காமல் விட்டது, அம்மா சுமாவை தன் வசம் இழுப்பது மட்டுமே. ஆனால் சிவகுருவின் சமீபத்திய செயல்பாடுகள், தன்னை பழைய நிலைக்கே கொண்டு வந்து விட்டதை நம்ப முடியவில்லை, மணியால். இந்த முறையும் தோல்வி அடைந்தால், அது கொடுக்கும் வலியை தாங்கிக் கொள்ளும் சக்தி அவனிடம் இல்லை என்பது அவனுக்கு நன்றாகத் தெரிந்தது.
சிவகாமிக்கும் சிவகுருவுக்கும் உள்ள தொடர்பை வெளிப்படுத்தியிருந்தால், இரண்டு வருடங்களுக்கு முன்பே சிவகுருவை மிக எளிதாக தன்னால் விழத்தியிருக்க முடியும். ஆனால் இப்பொழுது அதை சொல்லி நம்ப வைப்பது கடினம் என்பதை காட்டிலும், சிவகுரு மட்டும் சாமர்த்தியமாக காய் நகர்த்தினால், தன் நிலை முன்னிலும் கேவலமாக மாறிவிடும், என்பதை நினைக்கையில் ஆத்திரம் பொத்துக்கொண்டு வந்தது மணிக்கு. சிவகுருவினால் கண்டிப்பாக அப்படி செய்யமுடியும் என்பகையும் மணி உணர்ந்திருந்தான். அவனுக்கு இருந்த ஒரே வாய்ப்பு, சிவகுருவை அடித்து வீழ்த்துவதுதான், அதற்கான வாய்ப்பு சரியான வாய்ப்பு இருந்தபோது அதை தவறவிட்டிருந்தவன், வேறு ஏதாவது வாய்ப்பு இருக்கிறதா என்று எண்ணி எண்ணி, ஒன்றும் புலப்படாமல் போக, வீரத்தியின் உச்சத்துக்கு சென்றான்.
எதிரில் தெரிந்த அவனது பெரியப்பாவின் சமாதியை, வெறுப்புடன் பார்த்தான்.
"இவ்வளவு சொத்து சுகம் இருந்தும், இப்படி கிறுக்குத் தனமா சாமியாரா போயி, யாருக்கும் பிரயோஜனம் இப்படி செத்துப்போகாம, பொறுப்பா இருந்திருந்தா, இன்னைக்கு எனக்கு இப்படி ஒரு நிலை வருமா?” கடந்த முறை பரிதாபப்பட்ட தன் பெரியப்பாவின் மேல் இந்த முறை வெருப்பை கக்கினான். தனக்கு மிகவும் அருகில் தெரியும் தோல்வியின் மொத்த பழியையும் தன் பெரியப்பாவின் மேல் போட்டான். "என்ன சாமி, ரொம்ப சந்தோசமா இருக்கீங்க போல!!" என்ற சத்தம் அவன் பெரியப்பாவை அவனிடம் இருந்து காப்பாற்றியது.
*****************
"என்ன சாமி, ரொம்ப சந்தோசமா இருக்கீங்க போல!!" என்ற சத்தம், அவன் பெரியப்பாவை அவனிடம் இருந்து காப்பாற்ற, சத்தம் வந்த திசையை நோக்கினான்.
அதே பிச்சைக்கார சாமியார். மணியைப் பார்த்து சினேகமாக சிரித்தார், சிரித்தவரைப் பார்த்து முறைத்தான். யாரிடமும் பேசும் மனநிலையில் இல்லை, அவன்.
"என்ன சாமி ரொம்ப சந்தோசமா இருக்கீங்க போல!!” முறைத்துக் கொண்டிருந்தவனைப் பார்த்து மீண்டும் கேட்டவரை, நம்பமுடியாமல் பார்த்தவன், "முடியல" என்பதைப் போல் தலையசைத்தான். இந்த முறை சரியான அளவில் வேட்டி சட்டை அணிந்திருந்தார். சிகை அலங்காரம் போன முறை போல் அப்படியே இருந்தது.
"ஊதக் காத்து உசுர் வர, புடிச்சு ஆட்டுது!!, எப்படித்தான் வெறும் சட்டை துணையோடு இருக்கீங்களோ?" என்றவாறு தோளில் கிடந்த துண்டை எடுத்து, தன் மேல் உடலைப் போர்த்திக் கொண்டு, அவன் அருகில் அமர்ந்தார்.
சற்றுமுன் அவர் மேல் இருந்த வெறுப்பு, இப்பொழுது இல்லை, அவனிடம். இவ்வளவுக்கும் அவர் பெரிதாக ஒன்றும் செய்யவில்லை. மனிதரை கட்டிப்போடும் வித்தை தெரிந்தவர் போல என்று நினைத்தவன், கடந்த முறைபோல தன்னை தெம்பூட்ட எதேனும் சொல்வாரா என்ற எதிர்பார்ப்பில், அவரையே பார்த்துக்கொண்டு இருந்தான். அவரோ, இவனைக் கண்டு கொள்ளாமல், போர்த்திய துண்டை இழுத்து பிடித்துக் கொண்டு, சமாதியை பார்த்துக் கொண்டிருந்தார். கொஞ்சநேரம் காத்திருந்தவன், போனதடவ ஏதோ உலறினார் என்பதற்காக பிச்சைக்காரரை, சாமியாராக கருதும் தன் என்னைத்தை நொந்துகொண்டு, எழுந்தவன், ஒரு இரண்டாயிரம் ரூபாய் நோட்டை எடுத்து அவரிடம் நீட்டினான், கடந்த கால நியாபாகத்தில். இவன் ரூபாய் நோட்டை நீட்டியதும் பல் இளித்தவர்
"சாமி!! 50, 100, 500னு இருக்குமானு பாருங்களேன்!!, போனதட, நீங்க குடுத்த 2000 ரூபாயை மாத்தூறதுக்குள்ள போதும், போதும்னு ஆகிருச்சு!!" இளித்த, இளிப்பை குறைக்காமல் கேட்டார், ஏதோ கொடுத்து வைத்ததைப் போல. மீண்டும் அவர் செய்கையை நம்பமுடியாமல், தலையைாட்டியவன், வேலேட்டில் இருந்து, அவர் கேட்டது போல நோட்டுக்களை எடுத்துக்கொடுத்தான். வாங்கிக் கொண்டவர், அதை எண்ணி, மடித்து, தன் சட்டைப் பையில் வைத்துக் கொண்டு.
"சாமி, நம்ம சந்தோஷத்துக்கு வேணா ஆயிரம் பேர் என்ன லட்சம் பேர் கூட, காரணமா இருக்கலாம்!! நம்ம கஷ்டத்துக்கும், வலிக்கு, எப்பவவுமே, நம மட்டும்தான் காரணமா இருப்போம்!! என்றவர் போர்த்தி இருந்த துண்டை எடுத்து, தன் இரு காதுகளையும் மறைத்தவாறு, தலையில் கட்டிக் கொண்டார்.
"காது, கால், வழியாத்தான் குளிர் மனுஷனுக்குள்ள இறங்குமாம், துண்ட இப்படி காதை சுத்தி கட்டுனா, உடம்புக்கு குளிர் தெரியாதாம்" என்று அவனுக்கு சம்பந்தமே இல்லாமல் குளிரில் இருந்து பாதுகாத்துக் கொள்ளவது எப்படி என்று பாடம் எடுத்தவர், கால்களை சம்மணமிட்டு, தனது வேட்டிக்குள் மறைத்து வைத்துக் கொண்டு, செய்முறை விளக்கமும் கௌததார்.
"புத்திகெட்டவன்தான், தான் கஷ்டத்துக்கு அடுத்தவங்கிட்ட காரணம் தேடுவான். நம்ம வலிக்கு அடுத்தன் செயல்ல காரணம் தேடினா அந்த வழியில் இருந்து மீளவே முடியாது!! என்ன நாஞ் சொல்றது!!” என்றவர் அவனது பெரியப்பாவின் சமாதியைப் பார்த்தார்.
"வலிக்குமேனு பயந்தவன் வாழ் வீச முடியுமா?" மணியைப் பார்த்து திரும்பியவர் கேட்க, அவனுக்கு அவர் சொல்வது புரிந்தும் புரியாமலும் இருக்க, என்ன சொல்வதெண்டறு தெரியாமல் முழித்தான்.
"சாமிக்கு புரியலனு நினைக்கேன்!!” என்று யோசித்தவர்.
"சரி சாமி!! உங்களுக்கு புரியிற மாதிரியே சொல்லறேன்!!” என்றவர், பின் முகத்தை மாற்றி
"சண்டையில கிழியாத சட்டை எங்கே இருக்கு?" வடிவேலு போலவே சொல்லிக் காட்டியவர், கலகலவென்று சிரித்தார். அவர் வலியைப் பற்றி சொன்னது மணிக்கு புரிந்ததோ, புரியாவில்லையோ, அது அவனுக்குத்தான் வெளிச்சம். ஆனால், அவன் மனதில் இறுக்கம் கொஞ்சம் தளர்ந்திருந்தது. அங்கிருந்து சமாதியின் வாயிலை நோக்கி நடந்தான்.
"என்னாச்சுப்பா, ரெண்டு நாள் இருந்துட்டு போலாம்னு நீதான சொன்ன?" சிவகுருவின் சாமர்த்தியமான காய் நகர்த்தல் சோர்வுற்று இருந்த மணி, இரண்டு நாள் பழனியிலே இருக்கலாம் என்று இன்று காலைதான், தன் தாத்தாவிடம் சொல்லியிருந்தான்.
"இல்ல தாத்தா, கம்பெனி லிஸ்டிங்க்கு, இன்னும் ஒரு வாரம் தான் இருக்கு!! நிறைய வேலை இருக்கும்!! என்னால இங்க ரெண்டு நாள் சும்மா இருக்க முடியாது!!” இன்னும் கொஞ்ச நாள் போகட்டும் என்றும் இரண்டு நாட்களுக்கு, முன் கெஞ்சியை பேரனின் புது உத்வேகத்தைப் பார்த்து சந்தோஷம் கொண்ட மணியின் தாத்தா.
"இப்ப தாண்டா ராஜா நீ நான் வளர்த்த புள்ள!!" பெருமைப் பட்டுக்கொண்டார்.
நீண்ட நாட்களுக்குப்பின் பழனி வந்ததால், மணியைப் பெற்றோருடன் கோயம்புத்தூர் அனுப்பிவிட்டு, மூன்று நாள் கழித்து வருவதாக சொல்லி, பெரியவர்கள் மூவரும் பழனியில் கொண்டார்கள். முன்னால், சிவகுரு அமர்ந்திருக்க, பின்னால் அவனும், சுமாவும் அமர்ந்திருந்தனர் காரில். சுமா கொஞ்சம் நகர்ந்து, தன் மகனுக்கும் தனக்கும் இருக்கும் இடைவெளியை குறைக்க, தலை சாய்ந்து அமர்திருந்தவன், அப்படியே தூங்கி சரிய, அவனை ஒட்டி அமர்ந்த சுமா, மகனை தன் தோள்களில் சரித்துக்கொண்டாள்.
"இறங்கி அடிக்க துணிஞ்சிட்டா,
இரக்கம் பாக்குறது மடத்தனம்,
அந்த மூடத்தனத்தை பண்ணிப்பூட்டா
மண்ணுக்குள்ள தான் போவணும்"
தன் பெரியப்பாவின் சமாதியின் வாயிலை அவன் நெருங்க, அந்த பிச்சைக்கார சாமியார், பெருங்குரல் எடுத்து, ராகமிட்டு பாடியது கேட்டது, வசதியாக படுத்துக் கொண்டவனின் கனவில்.
************
இரண்டு நாள் கழித்து,
பழனியிலிருந்து உத்வேகத்துடன் வந்திருந்தாலும், தன் மூளையை கசக்கிப் பிழிந்த போதும், வழி ஏதும் புலப்படாமல் தவிர்த்திருந்தான் மணி. அவனுக்கான நேரம் மிகவும் குறைவாகவே இருந்தது. தங்கள் நிறுவனத்தை, பங்குச்சந்தையில், பட்டியலிடுவதற்கான செயல்முறைகள் மற்றும் பதிவு செய்வதற்கு, தேவையான வழிமுறைகளில், தனக்கு எதுவாக, ஏதாவது வாய்ப்பு இருக்குமா? என்று ஆராய்ந்து கொண்டிருந்தான், தன் அலுவலக அறையில். டேபிளில் இருந்த தொலைபேசி அழைப்பு அவனது கவனத்தை, தன்பக்கம் ஈர்த்தது.
அதை எடுத்து காது கொடுக்க
"சார்!! பிரதீப்னு ஒருத்தர், உங்கள பார்க்கிறதுக்கு வந்திருக்கார்!!, உங்க பிரண்டுனு சொல்றார்!!.... " என்று சொல்லப்பட்டுக் கொண்டிருக்கையிலேயே ,
"உடனே உள்ள அனுப்புங்க!!" இடைமறித்து சொன்னவன்,
பிரதீப்பின், திடீர் வருகையால் இன்னதென்று சொல்ல முடியாத ஏதோ ஒரு உணர்வால் ஆட்கொள்ளப்பட்டான்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு பிரதீப்பை எப்படி எதிர்கொள்வது என்று தெரியவில்லை அவனுக்கு. கதவு திறக்கப்பட்டதும், ஒரு சின்னப் புன்னகையுடன் நிமிர்ந்து பார்த்தவன் அதிர்ச்சியுற்றான்.
பிரதீப்பை பின் தொடர்ந்து, மீண்டும் அவன் வாழ்வில் வந்தாள் மது.
*********
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக